உள்ளூர் செய்திகள்

சேவலை விழுங்கிய 10 அடி நீள மலைப்பாம்பு

Published On 2023-07-26 13:59 IST   |   Update On 2023-07-26 13:59:00 IST
  • தீயணைப்பு துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்
  • ஒடுகத்தூர் கால்நடை ஆஸ்பத்திரியில் பரபரப்பு

அணைக்கட்டு:

ஒடுகத்தூர் நரிக்குறவர் பகுதியை சேர்ந்தவர் சந்துரு (வயது 13). இவர் சண்டை சேவல் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த சேவலுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால், ஒடுகத்தூர் கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு சென்றதும் சேவல் திடீரென ஆஸ்பத்திரி பின் புறம் உள்ள புதருக்குள் பறந்து சென்றது.

புதருக்குள் சென்ற சேவலை தேடி சந்துரு சென்றார். அப்போது அங்கிருந்த மலைப்பாம்பு சேவலை விழுங்கி கொண்டு இருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்துரு என் சேவல் போச்சி, என் சேவல் போச்சி என அழுதுகொண்டே புதருக்குள் இருந்து வெளியே வந்தான்.

டாக்டர்கள் சிறுவனை விசாரித்தபோது, மலைப்பாம்பு சேவலை விழுங்கியதை கூறினர். இதைதொடர்ந்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த ஒடுகத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தணிகைவேல் தலைமையிலான படை வீரர்கள் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.

Tags:    

Similar News