உள்ளூர் செய்திகள்

விபத்துக்குள்ளான காரை படத்தில் காணலாம்.

கீரம்பூர் அருகே கார் கவிழ்ந்து பெண் உள்பட 2 பேர் பலி

Published On 2022-06-17 09:02 GMT   |   Update On 2022-06-17 09:02 GMT
கீரம்பூர் அருகே கார் கவிழ்ந்து பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.

பரமத்திவேலூர்:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கோடங்கிபட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 47), சிவசாமி மகன் அழகுராஜா (31), கோவிந்தராஜ் மகன் கணேசன் (30), அம்சகொடி(50), ஜெயபாண்டியன்(42), அழகு ராஜா மனைவி சுகன்யா(25), கார் டிரைவர் சிலம்பரசன்(32) உட்பட 7 பேர்கள் கோடங்கிபட்டியில் இருந்து நேற்று காரில் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பை- பாஸ் சாலையில் கீரம்பூர் அருகே கார் சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென ஒரு வாகனம் வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் இடது பக்கத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரில் வந்த சுகன்யா மற்றும் ஜெயபாண்டியன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி போலீசார், உயிரிழந்த‌ சுகன்யா மற்றும் ஜெயபாண்டியன் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் படுகாயம் அடைந்த சுரேஷ், அழகுராஜா, கணேசன், அம்சகொடி மற்றும் கார் டிரைவர் சிலம்பரசன் ஆகிய 5 பேர்களையும் காப்பாற்றி நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News