கோவை அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: கல்லூரி மாணவர் பலி
- விபத்து குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்துக்களை தடுக்க போலீசார் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை:
நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் உடையார். இவரது மகன் ரோஷன் (வயது20).
ரோஷன் கோவை அருகே கே.ஜி.சாவடியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு மெக்கானிக் படித்து வந்தார்.
நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் ரோஷன் மோட்டார் சைக்கிளில் பாலக்காடுக்கு செல்ல புறப்பட்டார். மோட்டார் சைக்கிள் சேலம்-கொச்சின் எல்.என்.டி. பைபாஸ் புறவழிச்சாலையில் சென்று கொண்டு இருந்தது.
அப்போது அங்கு உள்ள பெட்ரோல் பங்க் அருகே தேன்பண்ணை பகுதியில் சென்ற போது கொச்சியில் இருந்து சேலம் நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியும், மோட்டார் சைக்கிளும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன.
இதில் மோட்டார் சைக்கிளுடன் ரோஷன் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார்.
சிறிது நேரத்திலேயே ரோஷன் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து அறிந்ததும் மதுக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உயிரிழந்த ரோஷன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த விபத்து குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான மாணவர் ரோஷன் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்.ஏ.வின் உறவினர் மகன் ஆவார்.
ரோஷன் விபத்தில் இறந்த தகவல் அறிந்ததும் அவருடன் படித்து வரும் சக கல்லூரி மாணவர்கள், உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விபத்து நடந்த பகுதி அடிக்கடி உயிர் இழப்புகளை ஏற்படுத்தும் பகுதி என்று கூறப்படுகிறது.
அந்த இடத்தில் விபத்துக்களை தடுக்க போலீசார் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.