உள்ளூர் செய்திகள்

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பம்

Published On 2023-04-12 14:14 IST   |   Update On 2023-04-12 14:14:00 IST
  • கலெக்டர் தகவல்
  • மே 31-ந் தேதி கடைசி நாள்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை பெற விண்ணபிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன் விவரம் வருமாறு:-

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகைத் திட்டத்தில் பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், பள்ளியிறுதி வகுப்புத் தேர்ச்சி, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி, பட்டப்படிப்பு கல்வித்தகுதிகள் தேர்ச்சிப் பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ச்சியாக பதிவினை புதுப்பித்து வருபவர்கள் 31.03.2023 -ம் தேதியின் நிலவரப்படி ஐந்தாண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும்.

மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களாக இருப்பின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.மாற்றுத்திறாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு இல்லை ஒரு பதிவுதாரருக்கு ஒருமுறை மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும். 10-ம் வகுப்பு தவறியவர்களுக்கு மாதம் ரூ.200 -ம், 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300 -ம், மேல்நிலைக்கல்வி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.400-ம் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 எனவும்,

மாற்றுத்திறனாளி களுக்கு 10 ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.600-ம், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ 750 -ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1000 -ம் உதவித்தொகை வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட தகுதிகள் உள்ளவர்கள் திருவண்ணாமலை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறப்பட்ட விண்ணப்பப்படிவத்திலோ அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்திலோ பூர்த்தி செய்து வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலரிடமிருந்து பெறப்பட்ட சான்றும்,

தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதார் அட்டை மற்றும் அனைத்து கல்விச்சான்றுகள் அசல் மற்றும் நகல்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 31.05.2023 - க்குள் விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனா ளிகளுக்கு வருமானசான்று தேவையில்லை என்பதால் மேற்குறிப்பிட்ட இதர ஆவணங்களுடன் நேரில் வருகைபுரிந்து விண்ணப்பம் அளித்து சேர்க்கைக்கான அனுமதி பெறலாம் என திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News