பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள் மறியல்
- போதிய ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து நடந்தது
- போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை
செங்கம்:
செங்கம் அருகே உள்ள காயம்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு போதிய அடிப்படை வசதி இல்லை என கூறப்படுகிறது. குடிநீர், கழிவறைகள், வகுப்பறை கட்டிடங்கள் உட்பட பள்ளிக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் சரிவர வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மேலும் போதிய ஆசிரியர்கள் இல்லை எனவும் மாணவர்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் அடிப்படை வசதிகள் உட்பட போதிய ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து பள்ளி மாணவர்களும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பள்ளியின் கேட்டை மூடி பூட்டு போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.