உள்ளூர் செய்திகள்

அருணாசலேஸ்வரர் கோவிலில் தொடங்கப்பட்டு உள்ள சிறப்பு பிரிவில் பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்துவதை படத்தில் காணலாம்.

கார்த்திகை தீப விழாவையொட்டி மகா தீப நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு தொடக்கம்

Published On 2022-10-31 15:29 IST   |   Update On 2022-10-31 15:29:00 IST
  • ஒரு கிலோ நெய் ரூ.250, அரை கிலோ ரூ.150, கால் கிலோ ரூ.80 என்ற அடிப்படையில் காணிக்கை செலுத்தலாம்
  • கோவில் அலுவலர் தகவல்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகா தீப நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 24-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. 27-ந் தேதி அதிகாலையில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் சிகர நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 6-ந் தேதி நடக்கிறது. அன்று காலை பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

மகா தீபம் ஏற்றுவதற்கு 3500 கிலோ நெய், 1000 மீட்டர் திரி (காடா துணி) பயன்படுத்துவது வழக்கம். கொரோனா தளர்வுகளை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

இதனால் இந்த ஆண்டு 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வர கூடும் என்று மாவட்ட நிர்வாகம் எதிர்ப்பாக்கப்படுகிறது. அதையொட்டி தீபத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.

இதில் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் நெய் காணிக்கைக்காக பணம் செலுத்தி வருகின்றனர். பணம் செலுத்தும் பக்தர்களுக்கு அதற்கான ரசீது உடனுக்குடன் வழங்கப்படுகிறது.

இதில் ஒரு கிலோ நெய் ரூ.250, அரை கிலோ நெய் ரூ.150, கால் கிலோ நெய் ரூ.80 என்ற அடிப்படையில் நெய் காணிக்கையை செலுத்தலாம் என்று கோவில் அலுவலர்கள் தொிவித்தனர்.

Tags:    

Similar News