உள்ளூர் செய்திகள்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

Published On 2023-02-07 09:30 GMT   |   Update On 2023-02-07 09:30 GMT
  • திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
  • வேலூர் ஜெயிலில் அடைப்பு

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா மோட்டூர் கிராமம் நயம்பாடி பகுதியை சேர்ந்தவர் மனுநீதி (வயது 55), தொழிலாளி.

இவர், கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச முடியாத 13 வயது சிறுமியை கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சிறுமியின் உறவினர்கள் வந்தனர். இதை கண்ட மனுநீதி அங்கிருந்து தப்பியோடி உள்ளார். இதுகுறித்து சிறுமியின் உறவினர் போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மனுநீதியை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

இரட்டை ஆயுள் தண்டனை

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட மனுநீதிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த இரட்டை ஆயுள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து மனுநீதியை போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News