திருவண்ணாமலையில் போளூர் சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து வாகனங்களை மூழ்கடித்து ெசன்ற காட்சி.
ரோட்டில் வாகனங்களை மூழ்கடித்து சென்ற வெள்ளம்
- திருவண்ணாமலையில் பலத்த மழை
- போக்குவரத்து பாதிப்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்தி வருகிறது.
இதனால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாமல் மிகவும் அவதி அடைந்து வந்தனர். கடந்த ஓரிரு தினங்களாக மாவட்டத்தில் அநேக பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
இந்த நிலையில் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. மதியம் சுமார் 3.30 மணியளவில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணிக்கு மேல் திடீரென்று பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் பைக், காரில் சென்றவர்கள் சாலையோரம் ஒதுங்கி சென்றனர். இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இதனால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி காணப்பட்டது. இந்த மழை நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் நின்றது. அப்போது போளூர் செல்லும் சாலையில் வெள்ளப்பெருக்கெடுத்து சாலையோரம் நின்று இருந்த வாகனங்கள் மற்றும் காய்கறி கடைகள் அனைத்தும் முழுகடித்து சென்றன.
இதனால் பள்ளி மாணவர்களும் சாலையில் ஒரே நேரத்தில் சென்றதால் திருவண்ணாமலை நகரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இந்த பலத்த மழையினால் சுமார் 2 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. சில இடங்களில் சாலையில் வைக்கப்பட்டு இருந்த பேரிகார்டுகள் சரிந்து விழுந்து கிடந்தது. மேலும் திருவண்ணாமலை - அவலூர்பேட்டை சாலையில் கிளிப்பட்டு அருகே சாலையோரம் இருந்த புளிய மரம் சரிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனை போலீசார் சீர் செய்தனர்.