உள்ளூர் செய்திகள்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2022-07-29 09:27 GMT   |   Update On 2022-07-29 09:27 GMT
  • கலெக்டர் முருகேஷ் உத்தரவு
  • திட்ட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

திருவண்ணாமலை:

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 37 கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

நீர் நிலை ஆக்கிரமிப்பு

இதில் பல்வேறு அரசு துறை அலுவலர்களும் புதுப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட 37 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசியதாவது :-

பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 2016-17 முதல் 2021-22 வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த வீடுகள் எண்ணிக்கை 2462 இதற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.59.08 கோடி ஆகும். பயனாளிகளால் முடிக்கப்பட்ட வீடுகள் எண்ணிக்கை 1082 இதற்கான மொத்த தொகை ரூ.25.96 கோடி சம்மந்தப்பட்ட பயனாளிகள் வங்கி கணக்கில் ஈடு செய்யப்பட்டது.

அகற்ற உத்தரவு

தற்போது கட்டப்பட்டு வரும் வீடுகள் மற்றும் நிலுவையில் உள்ள வீடுகளின் எண்ணிக்கை 1375 இதற்கான தொகை ரூ.33.00 கோடி ஆகும். மேலும், 2020-21 ஆம் ஆண்டு பசுமை வீடு திட்டத்தின் கீழ் மொத்த வீடுகள் 62, மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.1.63 கோடி ஆகும். பயனாளிகளால் முடிக்கப்பட்ட வீடுகள் 46, இதற்கான மொத்த தொகை ரூ.1.16 கோடி சம்மந்தப்பட்ட பயனாளிகள் வங்கி கணக்கில் ஈடு செய்யப்பட்டது. நிலுவையில் உள்ள வீடுகள் 16 ஆகும்.

இதற்கான மதிப்பீட்டு தொகை ரூ.47.10 லட்சம் ஆகும். நிலுவையில் உள்ள வீடுகளை விரைந்து கட்டி முடிக்கவும் கட்ட இயலாத பயனாளிகளை கண்டறிந்து ஊராட்சி மன்ற தலைவர் மூலமாகவும் அல்லது ஒப்பந்ததாரர்கள் மூலமாகவும் கட்டி முடிக்க அறிவுறுத்தினார்.

மேலும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றுதல், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், குடிசை வீடு கணக்கெடுப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், 14 - வது மற்றும் 15 - வது நிதிக்குழு மான்ய திட்டப்பணிகள், தூய்மை பாரத இயக்கம் (கிராமின்) திட்டத்தின் கீழ் தனிநபர் இல்லக்கழிப்பறைகள், பொது சுகாதார வளாகம் அமைத்தல் ஆகிய திட்டப்பணிகளை விரைந்து முடித்திடுமாறு அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் (ஊ.வ) ராமகிருஷ்ணன் உதவி இயக்குநர் (ஊராட்சி) சரண்யாதேவி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News