உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருமுருகன்பூண்டி ஆதிமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2022-11-30 07:55 GMT   |   Update On 2022-11-30 07:55 GMT
  • விழாவையொட்டி நேற்றுமுன்தினம் மாலை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
  • ஆதிமுத்து மாரியம்மன் மற்றும் கோபுலகலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அனுப்பர்பாளையம்:

திருப்பூர் திருமுருகன்பூண்டியில் 45 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள கோவில் நிர்வாக கமிட்டி முடிவு செய்தது. இதன்படி கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

இதையடுத்து நவக்கிரக ஹோமம், தனபூஜை, கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவையொட்டி நேற்றுமுன்தினம் மாலை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைக்கு பின்னர் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முளைப்பாரி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அங்குள்ள கருப்பராய சுவாமி கோவிலில் பூஜை நடைபெற்று, ஆதிமுத்து மாரியம்மன் கோவிலில் ஊர்வலம் நிறைவடைந்தது.

இதில் காளி, அம்மன் வேடமணிந்து வந்து நடனமாடியது பக்தர்களை கவர்வதாக அமைந்திருந்தது. முளைப்பாரி ஊர்வலத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்ததிரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று (செவ்வாய்கிழமை) 108 மூலிகை ஹோமங்கள், பூர்ணாகுதி, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா இன்று காலை 8 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி ஆதிமுத்து மாரியம்மன் மற்றும் கோபுலகலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தலைமை பூஜாரி டி.எம்.குமாரவேல் மற்றும் குடும்பத்தினர் உள்பட ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.   

Tags:    

Similar News