திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரியில் கருத்தரங்கு
- மதிப்பீடு மற்றும் கணக்கெடுப்பு பெறுவதற்கான விழிப்புணர்வு நடைபெற்றது.
- 3 முதல் 6 மாதம் ஆராய்ச்சி துறையுடன் இணைந்து தரவுகள் பற்றி கணக்கெடுப்பார்கள்.
திருப்பூர் :
திருப்பூருக்கு நிகர பூஜ்ய கார்பன் கிளஸ்டர்ஸ் சான்றிதழ் மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கு டிஐஎப்ஏசி .உடன் இணைந்து தரவு மதிப்பீடு மற்றும் கணக்கெடுப்பு பெறுவதற்கான விழிப்புணர்வு மற்றும் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பு கருத்தரங்கம் நிப்ட்-டீ கல்லூரியில் ஆராய்ச்சி மற்றும் இன்குபேஷன் மையத்தில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினர்களாக டிஐஎப்ஏசி .துறையின் ஆராய்ச்சி ஆய்வாளர்கள் தீபக்குமார் மற்றும் மணீஷ் குமார் கலந்து கொண்டனர். கல்லூரியின் முதல்வர் கே.பி.பாலகிருஷ்ணன் வரவேற்றார். இதில் ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பத் துறை தலைவர் அருள் செல்வன், இன்குபேஷன் மைய மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் மற்றும் கல்லூரியின் முதன்மை வழிகாட்டி ராஜா சண்முகம் பேசும்போது "கார்பன் வெளியிடும் தன்மை மற்றும் அதற்கு ஈடான பசுமை ஆற்றல் உருவாக்கம் மற்றும் கழிவு மறுசுழற்சி காரணமாக இவை இரண்டும் சமமாக உள்ள காரணத்தால் நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியிடும் கிளஸ்டர் என திருப்பூரை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதை ஏற்று ஆராய்ச்சியாளர் குழுவினர் வந்துள்ளனர். அவர்கள் 3 முதல் 6 மாதம் ஆராய்ச்சி துறையுடன் இணைந்து தரவுகள் பற்றி கணக்கெடுப்பார்கள். இதன் மூலம் திருப்பூர் கிளஸ்டர் முதல் நிகர பூஜ்ய கார்பன் கிளஸ்டர்ஸ் என்ற சான்றிதழ் பெற ஏதுவாக இருக்கும்" என்றார்.