உள்ளூர் செய்திகள்

திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்ற காட்சி.

வரிகளை நிலுவையின்றி வசூலிக்க வேண்டும் அரசு செயலர் உத்தரவு

Published On 2022-09-26 07:20 GMT   |   Update On 2022-09-26 07:20 GMT
  • கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஆய்வு நடத்தினர்.
  • திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

திருப்பூர் :

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா ஆகியோர் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஆய்வு நடத்தினர். பின்னர் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் முன்னிலை வகித்தார். உதவி கமிஷனர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் திட்டம், பொது நிதி, தொகுதி வளர்ச்சி நிதி, 15வது நிதிக்குழு மானியத் திட்டப்பணிகள், வரி உள்ளிட்ட வருவாய் இனம் குறித்த நிலவரம் என அனைத்து பணிகளும் ஆய்வு செய்யப்பட்டது. குடிநீர் சப்ளை நடைமுறை குறித்தும் அவர்கள் கேட்டறிந்தனர்.

மாநகராட்சி நிர்வாகத்தில் வரியினங்கள், வாடகை உள்ளிட்ட கட்டண வசூல் ஆகியன விரைவுபடுத்தி வசூல் பணிகள் மேம்படுத்த வேண்டும். வரி மறு சீரமைப்பு பணிகள் துரிதகதியில் செய்து முடித்து நிலுவையின்றி வசூலிக்க வேண்டும். வளர்ச்சிப் பணிகள் குறித்த காலத்துக்குள் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பணிகள் தரமாகவும், எந்த புகாருக்கும் இடம் தராத வகையிலும் முறையாக மேற்கொள்ள வேண்டும்.சுகாதாரப்பணிகள், குடிநீர் வினியோகம் ஆகியன எந்த தடையுமின்றி பொதுமக்கள் நலன் சார்ந்து மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News