உள்ளூர் செய்திகள்

நல்லாற்றில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை படத்தில் காணலாம்.

நல்லாற்றில் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

Published On 2022-07-26 08:12 GMT   |   Update On 2022-07-26 08:12 GMT
  • நீராதாரங்களில் கடந்த சில வருடங்களாகவே பெரியளவில் மழை பெய்யவில்லை.
  • நிலத்தடி நீர் இருப்பையும் உயர்த்திக் கொள்ள முடியும்.

உடுமலை :

மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் வடக்கு முகமான சரிவுகளில் உற்பத்தியாகும் பாலாற்றை தடுத்து திருமூர்த்தி அணை கட்டப்பட்டு உள்ளது. அணை நிரம்பிய பின்பு ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரானது உடுமலை தேவனூர்புதூர் அருகே நல்லாற்றுடன் இணைந்து பயணித்து ஆழியாற்றுடன் கலக்கிறது. இந்த இடைப்பட்ட தூரத்தில் ஏராளமான கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளின் நிலத்தடி நீராதாரத்தை உயர்த்தி விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது.

ஆனால் திருமூர்த்தி அணை மற்றும் நல்லாற்றின் நீராதாரங்களில் கடந்த சில வருடங்களாகவே பெரியளவில் மழை பெய்யவில்லை. இதனால் அணை நிரம்புவதிலும் தடங்கல்கள் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக பாலாறு மற்றும் அதன் துணை ஆறான நல்லாறும் நீர்வரத்து இல்லாமல் தவித்து வந்தது. ஆனால் மழைக்காலங்களில் வயல்வெளியில் தேங்கியுள்ள தண்ணீரில் பாலாற்றில் வழிந்து நல்லாற்றுடன் இணைந்து செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், திருமூர்த்தி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவநிலை மாற்றத்தால் மலைப்பொழிவு குறைந்துவிட்டது. இதனால் அணை நிரம்பிய பின்பு உபரி நீரை பெற்று வந்த பாலாறு திருமூர்த்தி அணையின் உதவி இல்லாமல் தவித்து வருகிறது. மேலும் நல்லாறும் பாலாற்றுக்கு தண்ணீர் வரத்தை அளிக்காமல் கைவிட்டு விட்டது. இதன் காரணமாக ஆற்றிலும் பெரிதளவு நீர்வரத்து ஏற்படவில்லை. அத்துடன் அதில் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளாதலால் வேப்பன்,புங்கன்.சீமை கருவேலம் உள்ளிட்ட மரங்களும்,செடிகளும் வளர்ந்து புதர் போல் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படும்போது ஆற்றில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கரைகளை வலுவிழக்க செய்து வருகிறது.

மேலும் ஆற்றின் கரையோரத்தில் ஒரு சில நபர்கள் தென்னை மரங்களையும் நடவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆறு படிப்படியாக அதன் பொலிவை இழந்து ஓடை போன்று காட்சி அளித்து வருகிறது. அதுமட்டுமின்றி ஆற்றில் புதர் மண்டி உள்ளதைச் ஆதாரமாகக் கொண்டு மர்ம ஆசாமிகள் சமூகவிரோத செயல்களை ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.எனவே நல்லாற்றில் வளர்ந்துள்ள செடிகள்,மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் கரையை பலப்படுத்துவதற்கும் தண்ணீர் தேங்குவதற்கு வசதியாக ஆங்காங்கே தடுப்பணைகளையும் கட்டி தண்ணீரை தேக்குவதற்கு முன்வர வேண்டும். இதனால் நிலத்தடி நீர் இருப்பையும் உயர்த்திக் கொள்ள முடியும். இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்பதால் சாகுபடி பணிகளிலும் ஊக்கத்தோடு ஈடுமுடியும் என்றனர்.

Tags:    

Similar News