உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒருவழிப்பாதை - அதிகாரிகள் கள ஆய்வு

Published On 2022-12-08 12:55 IST   |   Update On 2022-12-08 12:55:00 IST
  • கிரீன் பார்க் லே-அவுட் சாலை பிரிவு வரை ஒருவழிப்பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.
  • போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் வகையில் அதிகாரிகள் சார்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உடுமலை : 

உடுமலை நகரில் போக்குவரத்தை சரிசெய்யும் பொருட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த்கண்ணன் தலைமையில், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அப்போது போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளில் வாகன போக்குவரத்துக்கான வழித்தடங்களை ஒருவழிப்பாதைகளாக மாற்றியமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் உடுமலை உழவர் சந்தைக்கு அருகில் ராமசாமி நகருக்கு செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே கேட் அருகே ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் வகையில் அதிகாரிகள் சார்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உடுமலை நகராட்சி தலைவர் மு.மத்தீன் முன்னிலையில், நகராட்சி ஆணையாளர் ப.சத்தியநாதன் தலைமையில், பொறியாளர் மோகன், நகரமைப்பு அலுவலர் கோவிந்தராஜன், கட்டிட ஆய்வாளர் பழனிக்குமார், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஜெயந்தி, அரசு போக்குவரத்துக்கழக உடுமலை கிளை மேலாளர் நடராஜன் ஆகியோர் இந்த கள ஆய்வை மேற்கொண்டனர்.

அப்போது ரெயில்வே கேட் வழியாக சென்று ராமசாமி நகர் வழியாக அரசு கலைக்கல்லூரி சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் ரெயில்வே கேட்டை கடந்ததும் இடதுபுறமாக திரும்பி முத்தையாபிள்ளை லே-அவுட், கிரீன்பார்க் லே-அவுட் மற்றும் 60 அடி சாலை வழியாக சென்று மீண்டும் அரசு கலைக்கல்லூரி சாலையில் இணைந்து ராமசாமி நகர் வழியாக செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும் அரசு கலைக்கல்லூரி சாலை வழியாக வடக்கு நோக்கி வந்து ரெயில்வே கேட் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் வழக்கம்போல் வருவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரெயில்வே கேட்டை அடுத்துள்ள, பழனியாண்டவர்நகர் செல்லும் சாலையில் இருந்து பிரிந்து அரசு கலைக்கல்லூரிக்கு செல்லும் சாலையில் சிறிது தூரத்தில் உள்ள கிரீன் பார்க் லே-அவுட் சாலை பிரிவு வரை ஒருவழிப்பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News