சிறுதானியங்களை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் - உணவு பாதுகாப்பு அதிகாரி அறிவுரை
- திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொங்கல் நகரத்தில் குடிமங்கலம் வட்டார வேளாண் துறை சார்பில், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- வேளாண் உதவி அலுவலர் செந்தில்குமார் மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொங்கல் நகரத்தில் குடிமங்கலம் வட்டார வேளாண் துறை சார்பில், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் வேளாண் உதவி இயக்குநர் வசந்தா, வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்கள், மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார். மேலும் மாவட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன் கலந்து கொண்டு பேசியதாவது:-
அன்றாட உணவில் அரிசி, கோதுமையை அதிக அளவு சேர்த்து கொள்கிறோம். இதிலிருந்து கார்போஹைட்ரேட் சத்து மட்டுமே அதிகமாக கிடைக்கிறது. ஆனால் மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாக தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களான சோளம், கம்பு, ராகி, சாமை, திணை, வரகு மற்றும் குதிரைவாலி ஆகியவற்றில் காணப்படுகிறது. எனவே ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களை நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இவற்றில் புதிய ரகங்களாக சோளம் கோ-32, கம்பு ரகங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அதிக சத்துக்கள் , மகசூல், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
சிறுதானிய பயிர்கள் சாகுபடிக்கு கோடை உழவு, விதைநேர்த்தி, ஊட்டமேற்றிய தொழு உரம், உயிர் உரம், நுண்ணுாட்டச்சத்து மற்றும் உயிரியல் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் பேசினார். மேலும் உழவர் கடன் அட்டை குறித்து வேளாண் அலுவலர் சுனில்கவுசிக் பேசினார். முகாமில் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் சாகுபடி குறித்த விரிவான கையேடு, பேட்டரி தெளிப்பான், இடுபொருட்கள் போன்றவை வழங்கப்பட்டன. இதில் வேளாண் உதவி அலுவலர் செந்தில்குமார் மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.