உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி செல்லாத மாணவர்கள் கணக்கெடுப்பு பணி தீவிரம்

Published On 2022-12-21 03:47 GMT   |   Update On 2022-12-21 03:47 GMT
  • திருப்பூர் மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணி துவங்கியது, இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, நகராட்சிகளிலும் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

திருப்பூர்:

கொரோனா பாதிப்பு குறைந்த பின் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்து வருகின்றனர். மாநில அரசும் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுத்து வருகிறது.ஒன்று முதல் பிளஸ் 2 வரை, 100 சதவீதம் மாணவர் சேர்க்கையை உறுதி செய்யவும், தொடர்ந்து அனைவரும் கல்வியை தொடரவும், பள்ளி கல்வித்துறையால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

அவ்வகையில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவரை கண்டறிந்து அவர்களுக்கு ஒருங்கிணைந்த சிறப்பு பயிற்சி மையம் வாயிலாக கல்வி பயில ஏற்பாடு செய்யப்படுகிறது.

அதன்படி நடப்பாண்டு மொபைல்ஆப் வாயிலாக இக்கணக்கெடுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணி துவங்கியது. இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர் பயிற்றுனர், கிராம சுகாதார செவிலியர், அங்கன்வாடி பணியாளர், தன்னார்வலர்கள் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தொடர்ந்து ஒரு மாதம் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் பள்ளிக்கு செல்லாதவர்கள், இதுவரை பள்ளிக்கே வராத மாணவர்கள், 8-ம் வகுப்புக்கு முன்னரே பள்ளியை விட்டு இடை நின்ற மாணவர்கள் கண்டறியப்படுவர்.இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, நகராட்சிகளிலும் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோல ெரயில்வே நிலையம், பஸ் நிலையம், உணவகம், மார்க்கெட், குடிசை பகுதியில் உள்ள குழந்தைகள் மீதும் சிறப்புக்கவனம் செலுத்தப்படும். வருகிற 11-ந்தேதி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.இதற்கு மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News