உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க அளவீடு பணி
- தாசில்தார் உத்தரவின் பேரில் நேற்று சங்கோதி பாளையத்தில் அளவீடு பணி நடைபெற்றது.
- பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சங்கோதி பாளையம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே காரணம்பேட்டையில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக பல்லடம் தாசில்தார் நந்தகோபாலிடம் சங்கோதி பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- பல்லடம் அருகே உள்ள சங்கோதிபாளையத்தில், திருச்சி ரோட்டிற்கு செல்லும் மெயின் ரோடு அருகே, தனியார் நிறுவனத்திற்கு வழிப்பாதை அமைக்க மண் கொட்டி, அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இதனையடுத்து தாசில்தார் உத்தரவின் பேரில் நேற்று சங்கோதி பாளையத்தில் அளவீடு பணி நடைபெற்றது. சர்வேயர் மற்றும் கிராம அலுவலர் உள்ளிட்டோர் அளவீடு பணியை மேற்கொண்டனர். இதற்கிடையே ஆக்கிரமிப்பு குறித்து பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சங்கோதி பாளையம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.