உள்ளூர் செய்திகள்

கடைக்குள் புகுந்த சரக்கு வேன். 

பல்லடத்தில் சரக்கு வேன் மோதி ஒருவர் பலி - மனித நேய மக்கள் கட்சியினர் சாலை மறியல்

Published On 2023-06-04 06:29 GMT   |   Update On 2023-06-04 06:31 GMT
  • அக்கம்- பக்கம் உள்ளவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • பல்லடம் போலீசார் சரக்கு வேனை ஓட்டி வந்த கோவையைச் சேர்ந்த பிரதீப்ராஜ் என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

பல்லடம்:

கோவையிலிருந்து பல்லடத்திற்கு வாகன உதிரி பாகங்கள் ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தது. வேனை கோவையைச் சேர்ந்த பிரதீப்ராஜ்(வயது 38) என்பவர் ஓட்டிவந்தார். இந்த நிலையில் சரக்கு வேன் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்பல்லடம் அண்ணா நகர் பகுதியில் வந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், தாறுமாறாக ஓடி அங்கிருந்த பேக்கரி கடைக்குள் புகுந்தது. இந்த நிலையில், அங்கு தேநீர் அருந்திக் கொண்டிருந்த, மணிகண்டன்(75), ரங்கசாமி(47) , தங்கபாண்டி(36) ஆகியோர் மீது மோதியதில் 3பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம்- பக்கம் உள்ளவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடம் வந்த போலீசார், மற்றும் தீயணைப்பு படையினர் இடிபாடுகளில் இருந்து வேனை அகற்றினர். இதற்கிடையே, பல்லடம் அரசு மருத்துவமனையில் மணிகண்டனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். பலத்த காயமடைந்த ரங்கசாமி மற்றும் தங்கபாண்டியன் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சரக்கு வேனை ஓட்டி வந்த கோவையைச் சேர்ந்த பிரதீப்ராஜ் என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில், விபத்து ஏற்பட்டவுடன் அந்தப் பகுதியில் இருந்தவர்கள், வேன் டிரைவர் பிரதீப் ராஜை தாக்கினர். போலீசார் அவரை மீட்டனர். இந்த நிலையில் கோவை - திருச்சி மெயின் ரோட்டில் அண்ணாநகர் பகுதியில், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக கூறி நேற்று மாலை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து அங்கு சுமார் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனை அறிந்த பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News