நிழலி தென்கரை கற்பக விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா
- விழாவில் பலவகை ஆன்மீக நிகழ்ச்சிகளும் சொற்பொழிவும் நடந்து முடிந்தது.
- முன்னதாக மழை பெய்ய வேண்டியும், வெயிலின் தாக்கம் குறையவும் விசேஷ வழிபாடு நடைபெற்றது.
காங்கயம்:
காங்கயம் தாலுகா குண்டடம் யூனியன் நிழலி தென்கரையில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 48 நாட்களுக்கான மண்டல பூஜை தொடங்கியது. இதையடுத்து வரன்பாளையம் மடாதிபதி மவுன சிவாசல அடிகளாரின் ஆலோசனையின் படி உபயதாரரும், ஆன்மீக பிரமுகருமான திருப்பூர் தொட்டம்பட்டி வெங்கிடுசாமியின் தலைமையில் மண்டலாபிஷேக நிறைவு விழா ஆகம விதிப்படி நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அர்ச்சனை உள்பட பலவகை ஆன்மீக நிகழ்ச்சிகளும் சொற்பொழிவும் நடந்து முடிந்தது. இதில் காங்கயம், கொடுவாய், நிழலி, தாராபுரம், குண்டடம் உள்பட திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் இருந்து பக்தர்களும், உபயதாரர்களும் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக மழை பெய்ய வேண்டியும், வெயிலின் தாக்கம் குறையவும் விசேஷ வழிபாடு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை நிழலி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.