உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உடலின் வெப்பத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் அறிவிப்பு

Published On 2023-04-28 11:19 GMT   |   Update On 2023-04-28 11:19 GMT
  • மனித உடலின் தோலில் உள்ள சுரப்பிகள் வாயிலாக வேர்வையாக வெளியே தள்ளுகிறது.
  • ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு உடலின் இயக்கம் பாதிக்கப்படும்.

குடிமங்கலம் :

கோடை காலத்தில் வேகமாக பரவும் வைரஸ்களாலும், அதிகமாக தோன்றும் தூசுகளாலும், மரங்கள் பற்றாக்குறையால் ஏற்படும் அதீத வெப்பத்தினாலும், உடல்நிலை பாதிக்கும் என்கிறார்கள் டாக்டர்கள். இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், இயற்கையாகவே கோடைகாலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது உடல் சூடு, மனித உடலின் தோலில் உள்ள சுரப்பிகள் வாயிலாக வேர்வையாக வெளியே தள்ளுகிறது. இதனால் உடல் சூடு சமநிலை அடைகிறது.கோடைகாலத்தில் வெறும் காலில் நடப்பது காலை 11மணியிலிருந்து, மாலை 4மணி வரை வெயிலில் இருப்பது, அதிகப்படியான சட்டைகளை அணிந்து நீண்ட நேரம் வெயிலில் சுற்றுவது, கட்டட பணியாளர்கள், கைவண்டியை இழுத்து கொண்டு நடந்து செல்லுதல் உள்ளிட்டவர்களின் உடலில் வெப்ப சமநிலை அடையாததால், அவர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு உடலின் இயக்கம் பாதிக்கப்படும்.

இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்க தினசரி குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். தர்பூசணி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை அருந்தலாம். இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்படுவது குறையும். தண்ணீர் வசதி இருந்தால், ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளிக்கலாம். மசாலா பொருட்களால் தயாரிக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லதல்ல. குறிப்பாக, கோடைகாலத்தில் அதிக கலோரி கொண்ட உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது.

ஊறுகாய், உப்பு, சிவப்பு நிற இறைச்சி தவிர்க்க வேண்டும். மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடும் யோகாசன முறை செய்வதால், உடலில் உள்ள வெப்பத்தை கணிசமாக வெளியேற்ற முடியும்.

கோடைகாலத்தில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் உடலில் நீர் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இவர்கள் வெயிலில் அதிகமாக நடமாடுவதை தவிர்த்தல் வேண்டும்.இது போன்ற அறிவுரைகள் ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்களுக்கு மட்டுமே. சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்கள் உரிய மருத்துவரின் ஆலோசனை பெற்று கோடைகால நோய் தடுப்பு முறைகளை பின்பற்றுவது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News