உள்ளூர் செய்திகள்
நஞ்சராயன் குளத்தை பாதுகாக்க கோரி மனித சங்கிலி போராட்டம்
- நல்லாற்றின் குறுக்கே நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது.
- குளத்தின் நிலத்தை, நீர்நிலையாக வகை மாற்றம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகாவில் 440 ஏக்கர் பரப்பளவில், நல்லாற்றின் குறுக்கே நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. குளத்தின் அருகே உள்ள 9 ஏக்கர் நிலத்தை தனியார் அறக்கட்டளைக்கு அரசு விற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசு நிலம் விற்பனை செய்ததை ரத்து செய்து குளத்தின் நிலத்தை, நீர்நிலையாக வகை மாற்றம் செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கம் சார்பில் குளத்தை பாதுகாக்க கோரி மனித சங்கிலி போராட்டம் நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கையை வலியுறுத்தினர்.