கோப்புபடம்
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 14-ந்தேதி முதல் வாழைத்தார் ஏலம்
- கொப்பரை தேங்காய் ஏலம், வியாழக்கிழமை தோறும் பாக்கு மற்றும் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.
- வியாபாரிகள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவில் விற்பனை செய்கின்றனர்.
உடுமலை :
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேசிய வேளாண் சந்தை இ-நாம் மூலம் செவ்வாய்க்கிழமை தோறும் கொப்பரை தேங்காய் ஏலம், வியாழக்கிழமை தோறும் பாக்கு மற்றும் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.
ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் 2 ஆயிரத்து 600 ஏக்கரில் நெல், 23 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை, 2 ஆயிரம் ஏக்கரில் வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் விளையும் வாழைத்தார்களை வியாபாரிகள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவில் விற்பனை செய்கின்றனர்.
எனவே ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாழைதார் ஏலம் நடத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் வாழை விவசாயிகள் பயன் பெறும் வகையில் வியாழக்கிழமை தோறும் வாழைத்தார் ஏலம் நடைபெற உள்ளது.
இந்த ஏலம், தேசிய வேளாண் சந்தை இ- நாம் மூலம் நடைபெறும். இதில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநில வியாபாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இதனால் விவசாயிகள் கொண்டு வரும் வாழைத்தார்களுக்கு சரியான விலை, சரியான எடை, நேரடி வங்கி பணம் பரிமாற்றம் உடனடியாக கிடைக்கும். எனவே இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி பயன் பெறலாம்.இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில் முருகன் தெரிவித்தார்.