உள்ளூர் செய்திகள்

தெப்பதேர் பவனி நடைபெற்ற காட்சி

அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் தெப்பத்தேர் பவனி திரளான பக்தர்கள் தரிசனம்

Published On 2023-05-07 07:05 GMT   |   Update On 2023-05-07 07:05 GMT
  • சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
  • 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்கியது.

 அவினாசி : 

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய பாலகனை சுந்தரர்பதிகம்பாடி உயிருடன் மீட்டது போன்ற பல சிறப்புகள் பெற்றதாக அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்கியது. 29-ந் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடந்தது. இதையடுத்து 2 மற்றும் 3-ந் தேதி பெரிய தேர் இழுத்து நிலை சேர்க்கப்பட்டது. 4-ந் தேதி சிறிய (அம்மன்) தேர் இழுக்கப்பட்டது.

நேற்று இரவு தெப்பத்தேர் பவனி நடந்தது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடந்தது. பின்னர் சுவாமி திருவீதி உலா வந்து தெப்பக்குளத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அலங்கார விளக்குகள் வெளிச்சத்தில் சந்திரசேகர் அம்பாள் சாமிகள் அமர்த்தப்பட்டனர். தெப்பக்குளத்தில் 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.விழாவை காண அவினாசி சுற்றுவட்டார பகுதி, மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டவர்கள் தெப்பக்குள படிக்கட்டு, மற்றும் மதில்சுவர் மீதும் அமர்ந்து கண்டுகளித்தனர்.இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடராஜர் தரிசனம் மற்றும் நாளை மஞ்சள் நீர் விழா நடைபெறுகிறது.

Tags:    

Similar News