உள்ளூர் செய்திகள்

மணல் திருட்டை தடுக்க வேண்டும்

Published On 2023-06-28 09:17 GMT   |   Update On 2023-06-28 09:17 GMT
  • டிப்பர் லாரிகளில் வெளிமாநிலங்களுக்கும் கடத்தப்படுகிறது
  • கலெக்டர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

வாணியம்பாடி:

வாணியம்பாடி அடுத்த அம்பலூர், திம்மாம்பேட்டை, ஆவாரங்குப்பம் பகுதிகளில் தொடர்ந்து இரவு பகலாக மணல் கடத்தல் நடைபெறுகிறது. மாட்டு வண்டி, டிராக்டர், டிப்பர் லாரிகளில் வெளிமாநிலங்களுக்கும் கடத்தப்படுகிறது.

இது குறித்து தொடர்ந்து பொதுமக்கள் கலெக்டரிடம் நேரடியாகவும், திங்கட்கிழமை நடைபெறும் முகாமில் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திம்மாம்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல் நடைபெறுவதை தடுக்கும் வகையில், திம்மாம்பேட்டை போலீசார் ரோந்து பணிகளை மேற்கொண்டனர். அப்போது, ஆவாரங்குப்பம் அருகே உள்ள பாலாற்றில் இருந்து அனுமதியின்றி மாட்டுவண்டியில் மணல் ஏற்றி வந்த நபரை மடக்கி பிடித்தனர்.

போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ரவி (வயது 51) என்பதும் அவர் ஆற்று பகுதியில் இருந்து அனுமதி இல்லாமல் மணல் அள்ளி விற்று வந்ததும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அந்த நபரை கைது செய்து நடவடிக்கை எடுத்த போலீசார் அவர் மணல் ஏற்றி சென்ற மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனர்.

இதுபோல் மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, மணல் திருட்டை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News