உள்ளூர் செய்திகள்

விவசாயி கொலை வழக்கில் மாற்றுத்திறனாளிக்கு ஒரு ஆண்டு ஜெயில்

Published On 2023-09-15 10:52 GMT   |   Update On 2023-09-15 10:52 GMT
  • திருப்பத்தூர் கோர்ட்டு தீர்ப்பு
  • 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்

திருப்பத்தூர்:

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் அருகே உள்ள பட்டன் கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 37), விவசாயி.

கொலை

இவருக்கும், இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான துரை என்பவருக்கும் நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி துரைக்கு சொந்தமான நிலத்தில் சின்னதுரை மாடுகளை மேய்த்துள்ளார். இதனை துரை தட்டிக்கேட்டார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த துரை மற்றும் அவருடைய ஆதரவாளர்களான வெள்ளையன், இந்திராணி, ஜானகி ஆகிய 4 பேரும் சேர்ந்து சின்னதுரையை சரமாரியாக தாக்கினர்.

அப்போது துரை உருட்டு கட்டையால் சின்னது ரையின் தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சின்னதுரை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து துரை, வெள்ளையன், இந்திராணி, ஜானகி ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்தது. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பி.டி.சரவணன் ஆஜரானார். அதில் துரைக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பு வழங்கினார்.

வெள்ளையன், இந்திராணி, ஜானகி ஆகிய 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News