உள்ளூர் செய்திகள்

கிரிவலப்பாதையை தூய்மைபடுத்த பிரத்யேக ஏற்பாடு

Published On 2023-11-07 08:19 GMT   |   Update On 2023-11-07 08:19 GMT
  • கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு நடவடிக்கை
  • தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்க உத்தரவு

வேங்கிக்கால்:

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

இதில் பேசிய ஆட்சியர் அண்ணாமலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தூர கிரிவலப் பாதையை 14 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, தண்ணீர் வசதிகளுடன் கூடிய தூய்மையான கழிப்பறைகள் அமைக்கப்பட வேண்டும். குப்பைகளை உடனுக்குடன் அகற்றி பாதையை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

அனுமதி பெற்ற இடத்தில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். பக்தர்கள் அன்னதானத்தை வீணாக்காமல் சாப்பிட வேண்டும்.

தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் கார் பார்க்கிங் ஆகிய இடங்களில் நெரிசல் ஏற்படாதவாறு கண்காணிக்க வேண்டும். தற்காலிக பஸ் நிலையங்களை பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

பக்த ர்களுக்கு தேவையான அளவு அனைத்து வழித்த டங்களிலும் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலை சுற்றி உள்ள பகுதிகள் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தர்கள் இடையூறுகள் இன்றி கிரிவலம் வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்தார்.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, கூடுதல் ஆட்சியர் ரிஷப், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெற்றிவேல், நகராட்சி ஆணையாளர் ந.தட்சணாமூர்த்தி, அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் சி.ஜோதி, மண்டல இணை ஆணையர் சுதர்சனம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News