ஷட்டர் பழுதால் வீணாக வெளியேறும் தண்ணீர்.
குண்டாறு அணையில் ஷட்டர் பழுதால் வீணாக வெளியேறிய தண்ணீர் - உடனடி சீரமைப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
- குண்டாறு அணை மூலமாக சுமார் 1,200 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
- ஷட்டரில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய பணிகளுக்கு முக்கிய நீராதாரமாக மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை விளங்கி வருகிறது.
மாவட்டத்தில் முதலில் நிரம்பும் மிகச்சிறிய அணையான குண்டாறு அணை மூலமாக சுமார் 1,200 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியதும் அணை நிரம்பிவிட்ட நிலையில் தற்போது பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காட்டாற்று வெள்ளத்தால் அணையின் பிரதான மதகு பகுதியில் ஷட்டரில் மோதிய மரத்தடியால் ஷட்டர் சேதம் அடைந்தது. இதனால் அணையில் இருந்து 6 அடி அளவுக்கு தண்ணீர் வீணாக வெளியேறி தற்போது 30 அடியில் நீடிக்கிறது. அதற்குமேல் அணையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை இருந்து வருவதாக விவசாயிகள் புகார் கூறினர்.
எனவே உடனடியாக அணை ஷட்டரில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். தற்போது ஷட்டரில் அடைபட்ட மரத்தடியை தீவிர முயற்சிக்கு பின்னர் அதிகாரிகள் அகற்றினர். பின்னர் பழுதையும் சரி செய்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.