உள்ளூர் செய்திகள்

திருமண முகூர்த்தம், பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் கேரட் விலை ரூ.120 ஆக உயர்ந்தது

Published On 2022-09-28 09:44 GMT   |   Update On 2022-09-28 09:44 GMT
  • புரட்டாசி மாதம் என்பதால் சந்தைகளில் அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
  • திருமண முகூர்த்தம் மற்றும் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள் தேவை அதிகரித்துள்ளது.

சேலம்:

சேலம் மாநகரில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் புறநகரில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம் , எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி , ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. மேலும் சேலம், ஏற்காடு, மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், மேச்சேரி, கொளத்தூர், வீரபாண்டி, தாரமங்கலம், காடையாம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் தினசரி சந்தைகள் உள்ளன.

தற்போது புரட்டாசி மாதம் என்பதால் சந்தைகளில் அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். பழங்கள், தேங்காய், வாழை இலை, கீரை வகைகள் , பூசணிக்காய் , காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை ஆகிறது. இதே போல் பூக்கள் வியாபாரமும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது.

இந்த சந்தைகளுக்கு ஊட்டி, ஓசூர், கொடைக்கானல், கர்நாடகா உள்ளிட்ட குளிர் பிரதேசங்களில் இருந்து தினமும் கேரட் லாரிகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது பருவ நிலை மாற்றம் காரணமாக கேரட் லோடு வரத்து சரிந்துள்ளது.

இந்த நிலையில் புரட்டாசி மாதம், திருமண முகூர்த்தம் மற்றும் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக அன்றாட சமையல், ஜூஸ், அல்வா உள்ளிட்டவைகளுக்கு கேரட் பயன்படுத்துவதால் அதன் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 2 மாதங்களில் கேரட் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது.

உழவர் சந்தைகளில் கடந்த ஜூலை மாதம் கிலோ 40 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை விற்ற முதல் ரக ஊட்டி கேரட் ஆகஸ்டு மாதம் 80 ரூபாயாக உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு கிலோ கேரட் 120 ரூபாய் முதல் 135 ரூபாய் வரை விற்பனையாகிறது. மற்ற சந்தைகள், சில்லரை காய்கறி கடைகளில் இதை விட அதிக விலைக்கு கேரட் விற்கப்படுகிறது.

Tags:    

Similar News