உள்ளூர் செய்திகள்

நெல்லையில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-09-10 09:17 GMT   |   Update On 2022-09-10 09:17 GMT
  • கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சுபாஷினி தனது கணவர் ராஜேசை பிரிந்து குழந்தையுடன் நெல்லைக்கு வந்துவிட்டார்.
  • தற்கொலை செய்து கொண்ட சுபாஷினியின் கையில் அறுக்கப்பட்ட தடங்கள் இருந்தது.

நெல்லை:

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரும் பாளை டக்கரம்மாள்புரம் அருகே உள்ள ஜோதிபுரத்தை சேர்ந்த சுபாஷினி (வயது 23) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ளது. குடும்பத்துடன் பாலக்காட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சுபாஷினி கணவரை பிரிந்து குழந்தையுடன் ஜோதிபுரம் மேற்கு தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த சுபாஷினி இரவு உணவு சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு வழக்கத்தைவிட சீக்கிரமாகவே சென்றுவிட்டார். இன்று காலை வெகுநேரம் ஆகியும் அவரது அறையின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர்.

அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் சுபாஷினி இறந்து கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுபாஷினியின் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தற்கொலை செய்து கொண்ட சுபாஷினியின் கையில் அறுக்கப்பட்ட தடங்கள் இருந்தது. அவரது செல்போனை ஆய்வு செய்த போது தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது கையை அறுத்துக் கொண்டு அதனை புகைப்படமாக எடுத்து உறவினர்கள் சிலருக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி உள்ளார் என்ற விபரம் தெரிய வந்தது.

தொடர்ந்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆகி உள்ளதால் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News