- காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
- விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சீர்காழி:
கும்பகோணத்திலிருந்து சிதம்பரம் நோக்கி நேற்றிரவு ஒரு அரசு பஸ் சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
எருக்கூர் தூய சிந்தாத்திரை மாதா ஆலயம் அருகே சென்ற போது புத்தூரிலிருந்து சீர்காழி நோக்கி சென்று கொண்டிருந்த காரின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற புத்தூர் மேல தெருவை சேர்ந்த சிவபாலன்(வயது 38) என்பவர் காருக்குள்ளேயே உடல் நசுங்கி இறந்தார்.
காரில் பயணம் செய்த புத்துரை சேர்ந்த சக்தி வேல்(28), பாலமுருகன்(27) ஆகிய இருவரும் சிறு காயத்துடன் உயிர் தப்பினர. அரசு பஸ் சாலை ஓரம் சென்று நின்றது.
இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் இறந்த சிவபாலன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
விபத்தில் இறந்த சிவபாலன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தநிலையில் புத்தூருக்கு வந்து ஒரு மாத காலம் ஆகிறது.
இவருக்கும் ஓவியா (32) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று 3 வருடம் ஆன நிலையில் 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.