உள்ளூர் செய்திகள்

நாட்டறம்பள்ளி அருகே இளம்பெண் மர்மமரணம்- பிணத்துடன் உறவினர்கள் மறியல்

Published On 2022-12-01 10:23 GMT   |   Update On 2022-12-01 10:23 GMT
  • நாட்டறம்பள்ளி அருகே தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் சென்னை-பெங்களூர் 6 வழி சாலையில் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • சுவேதாவின் சாவிற்கு காரணம் மாமனார், மாமியார் மற்றும் அவருடைய கணவர் தான் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரி கிராமம் மணியகார் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சுவேதா (வயது 22) இவர்களுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. ஜெயஸ்ரீ (வயது 2) பெண் குழந்தை உள்ளது. கணவன் மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுவேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திம்மாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். சுவேதாவின் உறவினர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி கத்தாரி கிராமத்திலிருந்து சாலை வசதி இல்லாத காரணத்தால் சுவேதாவின் உடலை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தோளில் தூக்கி வந்தனர்.

நாட்டறம்பள்ளி அருகே தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் சென்னை-பெங்களூர் 6 வழி சாலையில் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுவேதாவின் சாவிற்கு காரணம் மாமனார், மாமியார் மற்றும் அவருடைய கணவர் தான் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி டி.எஸ்.பி.சுரேஷ் பாண்டியன், நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். திம்மம்பேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆவதால் திருப்பத்தூர் ஆர்.டி.ஓ. விசாரணை செய்து வருகிறார்.

நாட்டறம்பள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 30 நிமிடம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News