உள்ளூர் செய்திகள்

கர்ப்பத்தை கலைக்க வைத்து காதலன் ஏமாற்றி விட்டார்- இளம்பெண் போலீசில் புகார்

Published On 2023-03-19 10:23 GMT   |   Update On 2023-03-19 10:23 GMT
  • சுந்தரமூர்த்திக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது. இதனை அவர் மறைத்து இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி காதலித்தார்.
  • இளம்பெண் சுந்தரமூர்த்தியின் பெற்றோரை சந்தித்து கூறியபோது அவர்கள் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

போரூர்:

நாகப்பட்டினத்தை சேர்ந்த 24 வயது பட்டதாரி இளம்பெண் தண்டையார்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் வடபழனியில் தங்கி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் சுந்தரமூர்த்தி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இளம்பெண்ணின் பக்கத்து ஊரை சேர்ந்தவர் என்பதால் இளம்பெண் அவரிடம் நெருங்கி பழகி வந்தார்.

சுந்தரமூர்த்திக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது. ஆனால் இதனை அவர் மறைத்து இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி காதலித்தார். இதில் இளம்பெண் கர்ப்பம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து இளம்பெண் சுந்தரமூர்த்தியிடம் திருமணம் செய்துகொள்ளும் படி வற்புறுத்தினார். ஆனால் சுந்தரமூர்த்தி 'கர்ப்பத்தை கலைத்தால் மட்டுமே இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ முடியும்' என்று கூறினார். இதை உண்மை என்று நம்பிய இளம்பெண் தனது கர்ப்பத்தை கலைத்தார்.

ஆனால் சுந்தரமூர்த்தி திருமணம் செய்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார். இது பற்றி இளம்பெண் சுந்தரமூர்த்தியின் பெற்றோரை சந்தித்து கூறியபோது அவர்கள் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், காதலன் சுந்தரமூர்த்தி மற்றும் அவரது பெற்றோர் மீது வடபழனி மகளிர் போலீசில் புகார் செய்தார்.

இது பற்றி போலீசார் விசாரித்த போது தான் சுந்தரமூர்த்திக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பது தெரிந்தது.

இதனை கேட்டு இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக சுந்தர மூர்த்தி மற்றும் அவரது பெற்றோரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News