தேவகோட்டை அருகே மனைவியை மண்வெட்டியால் அடித்து கொன்றவர் கைது
- 3 மாதங்களுக்கு முன்பு தனபாலன், மனைவியிடம் நான் திருந்தி விட்டேன் என்று கூறி சினேகவள்ளியை வீட்டுக்கு அழைத்து வந்தார்.
- மீண்டும் கணவன்-மனைவி வாழ்ந்து வந்த நிலையில் தனபாலன் குடிபோதையில் நேற்று குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற சமயத்தில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருவேம்பத்தூர் ஆந்தகுடி இரவிய மங்கலம் புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் தனபாலன் (வயது45), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சினேகவள்ளி (38), இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
தனபாலன் தினமும் குடித்துவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார். இதையடுத்து 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவனிடம் இருந்து பிரிந்து மனைவி சினேகவள்ளி, தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
3 மாதங்களுக்கு முன்பு தனபாலன், மனைவியிடம் நான் திருந்தி விட்டேன் என்று கூறி சினேகவள்ளியை வீட்டுக்கு அழைத்து வந்தார். மீண்டும் கணவன்-மனைவி வாழ்ந்து வந்த நிலையில் தனபாலன் குடிபோதையில் நேற்று குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற சமயத்தில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த அவர், மண்வெட்டியால் மனைவியை தாக்கி கொன்றார்.
தேவகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் குமார், திருவேகம்பத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சினேக வள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சில மணி நேரங்களில் தனபாலனும் கைது செய்யப்பட்டார். மனைவியை அடித்து கொல்ல பயன்படுத்திய மண்வெட்டியை போலீசார் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.