நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டதால் மனைவியை கொன்றேன்- கைதான கணவர் வாக்குமூலம்
- ராஜாத்திக்கும், சில நபர்களுக்கும் தவறான தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
- இதனால் அர்ஜூனன், மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜாத்தி, ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
மேலூர்:
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள பொட்டபட்டிக்கு செல்லும் வழியில் கடந்த 29-ந் தேதி இளம்பெண் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த பெண் யார்? என விசாரித்தனர். மேலும் அந்தப்பகுதியில் இதுதொடர்பாக சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டது. இந்த நிலையில் பிணமாக கிடந்த பெண் மேலூர் அருகே உள்ள கருத்தலக்கான்பட்டி புதூரைச் சேர்ந்த ராஜாத்தி (வயது 19) என தெரியவந்தது.
தொடர் விசாரணையில், இவரது கணவர் அர்ச்சுணன் (25) என்பவர் மனைவியை தாக்கி எரித்துக்கொலை செய்துள்ளார். இதற்கு உடந்தையாக அவரது பெற்றோர் ராசு-அரியம்மாள், உறவினர்கள் வல்லான் என்ற ரவி, சிவலிங்கம் ஆகியோர் இருந்துள்ளனர். இதையடுத்து 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கைதான 5 பேரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி கொலையான ராஜாத்திக்கும், அர்ஜூனனுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அர்ஜூனனுக்கு, ராஜாத்தி 3-வது மனைவி ஆவார்.
இந்த நிலையில் ராஜாத்திக்கும், சில நபர்களுக்கும் தவறான தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அர்ஜூனன், மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜாத்தி, ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த அர்ஜூனன், தன்னை கொலை செய்வதற்கு முன்பு மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று அர்ஜூனன், பொட்டபட்டியில் மனைவியை தாக்கி எரித்துக்கொலை செய்துள்ளார். இதற்கு உடந்தையாக அவரது பெற்றோரும், உறவினர்களும் இருந்துள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.