காயல்பட்டினத்தில் வாலிபர் காரில் கடத்தப்பட்டாரா? 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை
- செய்யது அப்துல் காதரும், காதர் பீர்கானும் ஓட்டலில் இருந்துள்ளனர்.
- செய்யது அப்துல் காதர் தனது தம்பியை ஒரு கும்பல் காரில் கடத்தி சென்று விட்டதாகவும், ரூ.4 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருணாச்சலபுரத்தை சேர்ந்த யோக்கோப் அலியின் மகன் செய்யது அப்துல்காதர் (வயது 44). இவரது தம்பி காதர் பீர்கான் (29). இவர்கள் காயல்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தெருவில் ஓட்டல் நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கும், சென்னை வேளச்சேரியை சேர்ந்த காதர் முகைதீன் என்பவருக்கும் இடையில் சீட்டு பணம் கட்டுவது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் செய்யது அப்துல் காதரும், காதர் பீர்கானும் ஓட்டலில் இருந்துள்ளனர்.
அப்போது தனது நண்பர்கள் 3 பேருடன் வேளச்சேரி காதர் முகைதீன் அங்கு காரில் வந்துள்ளார். அவர் நம்மிடையே உள்ள பண பிரச்சனையை பேசி முடித்துக் கொள்வோம் என்று கூறி காதர் பீர்கானை காரில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் செய்யது அப்துல் காதர் தனது தம்பியை ஒரு கும்பல் காரில் கடத்தி சென்று விட்டதாகவும், ரூ.4 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார். இது பற்றி சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் வழக்குப்பதிவு செய்தார்.
குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி விசாரணை நடத்தியபோது காதர் பீர்கானும், அவரை கடத்தியதாக கூறப்படும் வேளச்சேரி காதர் முகைதீன், ஆதம்பாக்கம் செல்வேந்திரன், முருகேசன், காயல்பட்டினம் அலி அக்பர் ஆகியோர் திருச்செந்தூரில் இருப்பதாக தெரியவந்தது.
உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் காதர் பீர்கானை மீட்டனர். அவர் கடத்தப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.