சுங்கச்சாவடியில் விமானப்படை வீரர்கள் வந்த வாகனம் லாரியில் மோதி விபத்து
- விபத்தில் விமானப்டை வீரர்கள் வந்த வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.
- போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
தாம்பரம்:
கிழக்கு தாம்பரம், வேளச்சேரி சாலையில் விமானப் படை தளம் உள்ளது. இங்கு உள்ள வீரர்கள் வெளியில் வாகனத்தில் சென்று திரும்புவது வழக்கம்.
இந்த நிலையில் ஆவடியில் இருந்து விமானப்படை வீரர்களுடன் வாகனம் ஒன்று தாம்பரம் அடுத்த வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் முடிச்சூர் அருகே உள்ள சுங்கச்சாவடியில் வந்தது.
அப்போது முன்னால் வண்டலூர் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி சுங்கசாவடி கட்டணம் செலுத்துவதற்காக நின்றது. அந்த நேரத்தில் வேகமாக வந்த விமானப்படை வீரர்கள் இருந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் மோதியது. இதில் ராணுவ வாகனத்தை ஓட்டி வந்த விமானப்படை வீரர், அதில் இருந்த வீரர்கள் பலத்த காயமின்றி தப்பினர்.
இதனால் சுங்கச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானப்டை வீரர்கள் வந்த வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இது தொடர்பாக புகார் எதுவும் செய்யப்படவில்லை. தாம்பரம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விபத்தின் கண்காணிப்பு கேமரா காட்சி தற்போது வெளியாகி உள்ளது.