உள்ளூர் செய்திகள்

வந்தவாசியில் சென்னை பஸ்சில் பெண்ணிடம் நகை திருடிய அக்காள்-தங்கை கைது

Published On 2023-01-31 10:30 IST   |   Update On 2023-01-31 10:30:00 IST
  • 2 பெண்களை பஸ்சில் ஏற்றி வந்தவாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
  • 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வந்தவாசி:

சென்னை கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் வசீம். ஏ.சி.மெக்கானிக். இவர் தனது மனைவி அப்ரினுடன் வந்தவாசியில் நடைபெறும் உறவினர் இல்ல திருமணத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து போளூர் செல்லும் அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.

தென்னாங்கூர் கிராமம் அருகே பஸ் வந்து கொண்டிருந்தபோது கைக்குழந்தையுடன் வந்த 3 பெண்கள் வசீம் பேக்கை திறந்து அதில் இருந்த 15 பவுன் நகையை திருட முயற்சி செய்தனர்.

இதை கவனித்த வசீமின் மனைவி அப்ரின் உடனடியாக சுதாரித்துக் கொண்டு அவர்களிடம் கேட்டபோது 3 பெண்களும் பஸ்சை நிறுத்துமாறு கூறி கீழே இறங்கி தப்பி ஓட முயற்சி செய்தனர். உடனே வசீம் மற்றும் அவரது மனைவி அப்ரின் ஆகியோர் கூச்சலிட்டனர்.

அதன்பின் வசீம் மற்றும் சக பயணிகள் கீழே இறங்கி அந்த பெண்களை பிடிக்க ஓடினர். அதில் 2 பெண்களை அவர்கள் மடக்கி பிடித்தனர். ஒரு பெண் அவ்வழியாக வந்த பைக்கில் ஏறி தப்பி விட்டார்.

பின்னர் 2 பெண்களையும் பஸ்சில் ஏற்றி வந்தவாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

விசாரணையில் அவர்கள் திருச்சி, பீமா நகரைச் சேர்ந்த அக்காள்-தங்கையான ஆரிக்கா (வயது 30), அகிலா (28) என்பது தெரியவந்தது.அவர்கள் போலியான ஆதார் கார்டுகளை வைத்துள்ளனர்.

அவர்கள் இதுபோன்று வேறு எங்காவது திருட்டில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News