உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி எதிரொலி: நல்லகாத்து ஆற்றுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

Published On 2023-10-22 03:42 GMT   |   Update On 2023-10-22 03:42 GMT
  • ஆற்றுப்பகுதியில் குளித்து விளையாடுவதற்கு நன்றாக இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு குளித்து வருகிறார்கள்.
  • வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வால்பாறை:

கோவை மாவட்டம் வால்பாறையானது மிக சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.

இங்கு தேயிலை தோட்டங்கள், நீர்நிலைகள், காண்போரை கவரும் வகையில் உள்ளன. இவற்றை கண்டு ரசிக்க தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அந்த வகையில் கிணத்துக்கடவு அருகே உள்ள மணிகண்டபுரத்தை சேர்ந்த வினித்(வயது20), தனுஷ்(20), அஜய்குமார்(20), பெரியகளந்தையை சேர்ந்த சரத்(20), உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த நபில்(20) ஆகியோர் தனது நண்பர்கள் 10 பேருடன் வால்பாறைக்கு மோட்டார் சைக்கிளில் சுற்றுலா வந்தனர்.

அவர்கள் தேயிலை தோட்டங்களை சுற்றி பார்த்து விட்டு, சோலையாறு சுங்கம் நல்லகாத்து ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 5 பேரும் ஆற்று சுழலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில் நல்ல காத்து ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை பகுதியில் வனப்பகுதியில் இருந்து வரும் ஆறு கூலாங்கள் பகுதிக்கு சென்று சோலையார் எஸ்டேட் பகுதி வழியாக சென்று மீண்டும் நல்லகாத்துப் பகுதி வழியாக வனப்பகுதிக்கு செல்கிறது.

இந்த ஆற்றுப்பகுதியில் குளித்து விளையாடுவதற்கு நன்றாக இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு குளித்து வருகிறார்கள்.

தற்போது மாணவர்கள் பலியானதை அடுத்து நேற்று முதல் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News