உள்ளூர் செய்திகள்

கோவை பெண்ணை ஆபாசமாக பேசியதாக புகார்: டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா- சிக்கந்தர் கைது

Published On 2023-10-12 10:06 GMT   |   Update On 2023-10-12 10:06 GMT
  • சில நாட்களுக்கு முன் சூர்யாவும், அவரது நண்பரான சிக்கா என்கிற சிக்கந்தர் என்பவரும் பெண்ணை தகாத முறையில் யூடியூபில் விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.
  • தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவதூறாக பேசியது, பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை:

மதுரையை சேர்ந்தவர் ரவுடி பேபி சூர்யா. இவர் ரவுடி பேபி என்ற பெயரில் டிக்-டாக் செய்து பிரபலமானவர். இவர் அடிக்கடி பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி தனது பதிவுகளை பதிவேற்றம் செய்து வெளியிட்டு வந்துள்ளார்.

இதற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வந்தபோதும் அவர் தனது முடிவில் இருந்து மாறவில்லை. சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கருத்துக்கள் பதிவிடப்பட்டு வந்தன. பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் புகார்களும் அளிக்கப்பட்டு வந்தன.

மக்கள் பார்வை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் கோவையை சேர்ந்த பெண் சித்ரா. இவரது சேனலில் வரும் நிகழ்ச்சி தொடர்பாக ரவுடி பேபி சூர்யா தகாத முறையில் ஆபாசமாக பேசியுள்ளதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன் சூர்யாவும், அவரது நண்பரான சிக்கா என்கிற சிக்கந்தர் என்பவரும் அந்த பெண்ணை தகாத முறையில் யூடியூபில் விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்த பெண் மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் மாநகர சைபர் கிரைம் போலீசார் இன்று காலை ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் ஆகியோரை கைது செய்தனர்.

தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவதூறாக பேசியது, பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ரவுடி பேபி சூர்யா, அவரது நண்பர் சிக்கந்தர் ஆகிய இருவரிடமும் போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News