பண்ணைக்காடு அரசு பள்ளியில் கத்தி, அரிவாளுடன் சுற்றிய மாணவர்களால் பரபரப்பு
- ஆத்திரமடைந்த மாணவர்கள் ஆசிரியரையும் தகாத வார்த்தைகளால் திட்டினர்.
- விசாரிக்கப்படும் என கல்விஅலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலை பெரும்பாறை அருகே உள்ள பண்ணைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவர்கள் 2 கோஷ்டியாக பிரிந்து தகராறு செய்தனர். இதில் இருதரப்பு மாணவர்களும் மதுபோதையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பள்ளி வளாகத்திலேயே சுற்றி திரிந்தனர்.
இதைபார்த்த ஒரு ஆசிரியர் மாணவர்களை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் ஆசிரியரையும் தகாத வார்த்தைகளால் திட்டினர். இதுகுறித்து ஆசிரியர் தாண்டிக்குடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என ஆசிரியரிடம் முறையிட்டதால் அவர் புகாரை வாபஸ் பெற்றார்.
இருப்பினும் போலீசார் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மாணவர்களை எச்சரித்து விடுவித்தனர். இதுகுறித்து விசாரிக்கப்படும் என கல்விஅலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.