உள்ளூர் செய்திகள்

வத்திராயிருப்பு அருகே கூலித்தொழிலாளி படுகொலை- வாலிபர் கைது

Published On 2022-10-25 11:56 IST   |   Update On 2022-10-25 11:56:00 IST
  • முருகனை வழிமறித்து நிறுத்தி தகராறு செய்து தாக்கினர்.
  • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள அர்ச்சனாபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது52). இவர் கடந்த மார்ச் மாதம் 9-ந் தேதி அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் (37) என்பவரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பிறகு கேரளாவுக்கு சென்று விட்டார். அங்கு வேலை பார்த்து வந்த முருகன் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

நேற்று மதியம் வத்திராயிருப்பில் இருந்து அர்ச்சனாபுரம் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் உறவினர் பாண்டியன் என்பவருடன் சென்றார். அப்போது அங்கு மாரியப்பனின் மகன் ரஞ்சித்குமார் (24) மற்றும் அவரது நண்பர்கள் மாரியப்பன், முத்து, சூரியா, பால்பாண்டி, முத்துகுமார் ஆகியோர் வந்தனர்.

அவர்கள் முருகனை வழிமறித்து நிறுத்தி தகராறு செய்து தாக்கினர். பின்பு ரஞ்சித்குமார் தன்னிடம் இருந்த கத்தியால் முருகனை கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதையடுத்து அவர்கள் 6 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

முருகன் கொலை செய்யப்பட்டது குறித்து அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த பாண்டியன், வத்திராயிருப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள மாரியப்பன், முத்து, சூர்யா, பால்பாண்டி, முத்துக்குமார் ஆகிய 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News