ரூ. 13 கோடியில் கட்டப்படும் ஒதப்பை மேம்பாலத்தை ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டம்- அதிகாரிகள் தகவல்
- சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி.
- பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வரும் நிலை ஏற்பட்டது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை 16 மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். அப்படி திறந்துவிடப்படும் தண்ணீர் ஆற்றம்பாக்கம், ஒதப்பை, மோவூர், மெய்யூர், திருக்கண்டலம், அணைக்கட்டு, ஜனபன்சத்திரம் கூட்டு சாலை வழியாக பாய்ந்து எண்ணூரில் வங்கக் கடலில் கலக்கிறது.
பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கும் போதெல்லாம் ஒதப்பையில் கொசஸ்தலை ஆற்றின் மீது உள்ள தரைப்பாலம் மூழ்கி விடுவது வழக்கம். இந்த தரைப்பாலம் வழியாகத் தான் ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தரைப்பாலம் மூழ்கி விட்டால் வெள்ளம் குறையும் வரை வாகன போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகிறது.
இது போன்ற சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வரும் நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு ஒதப்பையில் கொசஸ்தலை ஆற்றின் மீது இடது-வலது புறங்களில் 2 உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதில் முதல் கட்டமாக இடது புறத்தில் பாலம் அமைக்க ரூ. 11.30 கோடி ஒதுக்கியது. இந்த நிதியை கொண்டு மேம்பாலம் அமைக்கும் பணிகள் 2019ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பின்னர் கடந்த மார்ச் மாதத்தில் பணிகள் மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 180 மீட்டர் நீளத்த்தில்,9.50 மீட்டர் அகலத்தில் 8 மெகா தூன்களுடன் இது இந்தப் பாலம் அமைக்கப்படுகிறது. வரும் மார்ச் மாதத்துக்குள் இந்த பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் மேற்கு திசையில் ரூ.13.89 கோடி செலவில் புதிதாக பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஈரோட்டை சேர்ந்த கட்டுமான நிறுவனம் இந்த பாலத்தை அமைக்கிறது. 33.4 மீட்டர் நீளத்தில், 5 மீட்டர் உயரத்தில் இந்தப் பாலம் அமைக்கப்படுகிறது. 8 தூண்கள் அந்தப் பாலத்தைத் தாங்கி நிற்கும்.
பாலம் பணியை வருகிற ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளதாக நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பாலம் பயன்பாட்டுக்கு வரும் போது கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தடையின்றி போக்குவரத்து நடைபெறும்.