மத்திய அரசை கண்டித்து நாளை ஈரோட்டில் ஜவுளி வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
- வணிகர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக விசைத்தறிகளை ஒருநாள் நிறுத்தி போராட்டத்தில் பங்கேற்க போவதாக விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
- சிறு, குறு தொழில்களுக்கு மட்டுமன்றி கார்ப்பரேட், பிரைவேட் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் சட்டத்தை ஒரே சீராக அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
ஈரோடு:
சிறு, குறு தொழில்கள் தங்களது வணிக கடன்களை விரைந்து வசூல் செய்வதற்கு ஏதுவாக மத்திய அரசு வருமானவரி சட்டத்தில் கொண்டு வந்துள்ள மாற்றம் அந்த துறையினருக்கு பாதகமாக இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மார்ச் 31-ந்தேதி முதல் அமலுக்கு வரும் புதிய சட்ட திருத்தத்தின்படி இருப்பு நிலை குறிப்பு கணக்கில் இருக்கும் வணிக கடன் நிலுவைகள் 45 நாட்களுக்கு மேலே சென்று இருந்தால் அவை வருமானமாக கருதப்பட்டு வருமான வரி செலுத்த வேண்டும் என சட்ட மாறுதல் செய்யப்பட்டுள்ளது.
இது சிறு, குறு தொழில்களை பாதிக்கும் என்பதால் அந்த துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த சட்டத்தை ஓராண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு கிளாத் மெர்சன்ட்ஸ் அசோசியேசன் சார்பில் நாளை (புதன்கிழமை) ஜவுளி வணிகர்கள் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளனர். இதில் ஈரோடு பகுதியில் உள்ள 5 ஆயிரம் கடைகள் அடைக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வணிகர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக விசைத்தறிகளை ஒருநாள் நிறுத்தி போராட்டத்தில் பங்கேற்க போவதாக விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி ஈரோடு, பள்ளிபாளையம், வெண்ணந்தூர், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் சுமார் 50 ஆயிரம் விசைத்தறிகள் நாளை ஒரு நாள் நிறுத்தப்படும் என்றும், இதனால் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும், சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான துணி உற்பத்தியும் பாதிக்கப்படும் என அவர்கள் கூறினர்.
சிறு, குறு தொழில்களுக்கு மட்டுமன்றி கார்ப்பரேட், பிரைவேட் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் இந்த சட்டத்தை ஒரே சீராக அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.