உள்ளூர் செய்திகள்

மரக்கடையில் தீ கொழுந்து விட்டு எரியும் காட்சி


எடப்பாடி அருகே மரக்கடையில் தீ விபத்து

Published On 2022-07-31 05:05 GMT   |   Update On 2022-07-31 09:30 GMT
  • கடையில் உள்ள மின் இணைப்பில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
  • மின் கசிவால் தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

எடப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட நைனாம்பட்டி, வளர்மதி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் மகன் சேகர் (வயது 34).

இவர் எடப்பாடி பஸ் நிலையம் அருகே சேலம் பிரதான சாலையில் மரக்கடை மற்றும் மர சாமான்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். வழக்கம்போல் அவர் நேற்று இரவு பணிகள் முடிந்து, கடையை பூட்டி விட்டு சென்றார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் சேகரின் மரக்கடை திடீரென தீப்பிடித்தது. தீ கடை முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. அதிகாலை நேரத்தில் தீ விபத்து நிகழ்ந்ததால் உடனடியாக இது பற்றி யாருக்கும் தெரியவில்லை. நீண்ட நேரம் கழித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை கண்டு எடப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயின் வேகம் அதிகரித்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடப்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் கடையில் விற்பனைக்கு தயாராக வைத்திருந்த மர சாமான்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. விலை உயர்ந்த தேக்கு, மா மரம் உள்ளிட்ட மரப்பலகைகள் என பல லட்சம் மதிப்புள்ள மரங்கள் தீயில் கரிக்கட்டைகளாகின

கடையில் உள்ள மின் இணைப்பில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என எடப்பாடி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News