உள்ளூர் செய்திகள்

வண்டலூரில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 10-ம் வகுப்பு மாணவன் விபத்தில் பலி

Published On 2022-12-20 14:30 IST   |   Update On 2022-12-20 14:30:00 IST
  • விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிப்பார்க்க ஆசைப்பட்டு விபத்தில் சிக்கி மாணவன் பலியான சம்பவம் நண்பர்கள் மற்றும் பெற்றோரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாம்பரம்:

வண்டலூர், தெரு வீதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரண்(வயது17). இவர் மண்ணிவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவரது நண்பர் ஒருவர் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வைத்து இருந்தார். அதனை மாணவர் சரண் ஓட்டி பார்க்க ஆசைப்பட்டார்.

நேற்று இரவு அவர் தனது நண்பரிடம் கே.டி.எம் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு ஓட்டிச் சென்றார். அவர் வேகமாக சென்றதாக தெரிகிறது.

வண்டலூர்-வாலாஜபாத் சாலையில், வண்டலூர் ஏரி அருகே வளைவில் திரும்பிய போது சரணால் மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி அங்கிருந்த இரும்பு தடுப்பில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சரண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிப்பார்க்க ஆசைப்பட்டு விபத்தில் சிக்கி மாணவன் பலியான சம்பவம் நண்பர்கள் மற்றும் பெற்றோரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News