உள்ளூர் செய்திகள்

குன்றத்தூர் அருகே கிணற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி

Published On 2022-10-21 14:27 IST   |   Update On 2022-10-21 14:27:00 IST
  • தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடிய போது நீண்ட நேரத்துக்கு பின்னர் பொன்னரசுவின் உடலை மீட்டனர்.
  • போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பூந்தமல்லி:

குன்றத்தூரை அடுத்த மணஞ்சேரி, பல்லாவரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பலராமன். இவரது மகன் பொன்னரசு (வயது15). இவர் குன்றத்தூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற பொன்னரசு மாலையில் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இதற்கிடையே மணஞ்சேரி, திருப்பதி நகரில் உள்ள கிரிக்கெட் மைதானம் அருகே உள்ள கிணற்றின் அருகே பொன்னரசுவின் பள்ளி சீருடை மற்றும் செருப்பு கிடந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கும், பூந்தமல்லி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடிய போது நீண்ட நேரத்துக்கு பின்னர் பொன்னரசுவின் உடலை மீட்டனர். அவர், கிணற்றில் குதித்து குளித்த போது தண்ணீரில் மூழ்கி இறந்து இருப்பது தெரிந்தது. அவரது உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொன்னரசு நண்பர்களுடன் வந்து குளித்தபோது இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது.இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News