உள்ளூர் செய்திகள்

ஆர்.எஸ்.மங்கலம் அருகே போட்டி: கடலில் சீறிப்பாய்ந்த பாய்மர படகுகள்

Published On 2023-03-22 16:21 IST   |   Update On 2023-03-22 16:21:00 IST
  • படகுகள் காற்றைக் கிழித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன.
  • எல்லை நோக்கி வந்த படகுகளை கடற்கரையில் கூடியிருந்த பொதுமக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

ஆர்.எஸ்.மங்கலம்:

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கடலூர் ஊராட்சிக்கு உட்பட்ட மோர் பண்ணை மீனவர் கிராமத்தில் தர்ம முனீஸ்வரர் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு பாய்மர படகு போட்டி நடந்தது.

இந்த போட்டியில் மோர்ப்பண்ணை, தேவிபட்டணம், திருப்பாலைக்குடி, முள்ளிமுனை, தொண்டி புதுக்குடி, கோட்டைப்பட்டினம் புதுக்குடி வரையுள்ள 10-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த 37 மீனவர் படகுகள் கலந்து கொண்டன.

ஒரு படகுக்கு 6 பேர் வீதம் கடலுக்குள் 5 மைல் தூரம் எல்லையாக நிர்ணயம் செய்யப்பட்டு மோர் பண்ணை கிராமத்தலைவர் சிங்காரம், ஊராட்சி மன்ற தலைவர் முருகவள்ளி பாலன், ஒன்றிய கவுன்சிலர் கமலக்கண்ணி, மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் மூர்த்தி, கிராம செயலாளர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் கொடியசைத்து போட்டிகள் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட படகுகள் காற்றைக் கிழித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன.

பின்னர் எல்லை நோக்கி வந்த படகுகளை கடற்கரையில் கூடியிருந்த பொதுமக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

இந்த போட்டியில் முதல் பரிசு ரூ. 40 ஆயிரத்தை தொண்டி புதுக்குடியைச் சேர்ந்த கருப்பையா ரத்தினவேல் படகு பெற்றது. 2-ம் பரிசு ரூ. 30 ஆயிரத்தை மோர்ப் பண்ணையைச் சேர்ந்த அய்யாதுரை நற்குணம் சாரதி படகும், 3-ம் பரிசு ரூ.25 ஆயிரத்தை மோர்ப்பண்ணையை சமயக் கண்ணன் யாழினி படகும், 4-ம் பரிசு ரூ. 20 ஆயிரத்தை திருப்பாலைக்குடியைச் சேர்ந்த இளங்கோவன் டி.டி.குரூப்ஸ் படகும், 5-ம் பரிசு ரூ. 15 ஆயிரத்தை தொண்டியை சேர்ந்த சீதாலட்சுமி படகும் பெற்றன.

போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவிபட்டணம் கடலோர காவல் படையினரும் திருப்பாலைக்குடி போலீசாரும் செய்திருந்தனர். இந்த படகு போட்டியை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர்.

Tags:    

Similar News