உள்ளூர் செய்திகள்

ஆந்திராவில் இருந்து கோவை வந்த பஸ் பயணிடம் ரூ.40 லட்சம் பறிமுதல்- ஹவாலா பணமா?

Published On 2023-03-05 13:49 IST   |   Update On 2023-03-05 13:49:00 IST
  • போலீசார் அவினாசி-திருப்பூர் சாலை பழங்கரை பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
  • அவினாசி போலீசார் அந்த நபரை ரூ.40 லட்சத்துடன் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அவினாசி:

திருப்பூர் மாவட்டம், அவினாசி மது விலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையிலான போலீசார் அவினாசி-திருப்பூர் சாலை பழங்கரை பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கோவை நோக்கி செல்லும் தனியார் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ் அவினாசிலிங்கம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்றது. அப்போது அந்த பஸ்சில் இருந்து இறங்கிய ஒரு நபர் பாலத்தின் ஓரமாக நின்று செல்போனில் பேசினார். சிறிது நேரத்தில் மற்றொரு நபர் அங்கு வந்தார்.

இவர்களை மதுவிலக்கு போலீசார் கண்காணித்து சந்தேகத்தின் பேரில் அவர்களின் அருகே சென்றனர். அப்போது அங்கு வந்த நபர் போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தார். இதையடுத்து பஸ்சில் இருந்து இறங்கிய நபரிடம் போலீசார் சோதனை செய்தனர். அவரிடம் 4 பொட்டலங்கள் இருந்தன. அவற்றைப் பிரித்து பார்த்தபோது, கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த மதுவிலக்கு போலீசார் அவரை அவினாசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர் கொண்டு வந்த பணத்தை எண்ணியபோது மொத்தம் ரூ.40 லட்சம் இருந்தது. அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து அவினாசி போலீசார் அந்த நபரை ரூ.40 லட்சத்துடன் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் பணம் கொண்டு வந்த நபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் ராஜஸ்தானை சேர்ந்த கமராம் கும்கர் (வயது 48) என்று தெரியவந்தது. இவர் ஆந்திராவில் பிரகாஷ் என்பவரது டெக்ஸ் நிறுவனத்தில் இருந்து ரூ.40 லட்சத்தை வாங்கி வந்துள்ளார்.

அந்த பணத்தை திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவன உரிமையாளரிடம் கொடுக்க வந்துள்ளார். போலீசாரைக் கண்டதும் ஓட்டம் பிடித்தது சங்கரராம் கும்கா என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து வருமான வரித்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்தப்பணம் ஹவாலா பணமா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News