உள்ளூர் செய்திகள்

சோழவரம் அருகே ரவுடி வெட்டிக்கொலை- மர்ம கும்பல் வெறிச்செயல்

Published On 2023-01-16 12:49 IST   |   Update On 2023-01-16 12:49:00 IST
  • உயிருக்கு போராடிய அஸ்வினை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
  • போலீசார் விரைந்து வந்து அஸ்வினின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

செங்குன்றம்:

சோழவரம் அருகே உள்ள விஜயநல்லூர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கமலநாதன். இவரது மகன் அஸ்வின் (வயது 28) ரவுடி. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

நேற்று இரவு அப்பகுதியில் உள்ள உறவினரை சந்திக்க அஸ்வின் வந்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த மர்ம கும்பல் அவரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அஸ்வின் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார். ஆனாலும் மர்ம கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர்.

இதில் தலை, கழுத்து, முகத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அஸ்வின் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்ததும் கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

உயிருக்கு போராடிய அஸ்வினை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அஸ்வினின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்று உடனடியாக தெரியவில்லை. கொலையுண்ட அஸ்வின் தற்போது புதூரில் வசித்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 2 பேருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு உள்ளது. இதனால் அஸ்வின், கடந்த 3 மாதத்திற்கு முன்பு விஜயநல்லூரில் இருந்து புதூருக்கு இடம்மாறி சென்று இருக்கிறார்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று இரவு விஜயநல்லூரில் உள்ள உறவினரை சந்திக்க வந்தபோது மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News