உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் சாரல் மழை- கொடைக்கானலில் மரம் முறிந்து போக்குவரத்து பாதிப்பு

Published On 2022-12-26 07:26 GMT   |   Update On 2022-12-26 07:26 GMT
  • கொடைக்கானலுக்கு தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காரணமாக அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
  • தொடர் சாரல் மழை மற்றும் மின் தடையால் அவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொடைக்கானல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்திருந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. திண்டுக்கல்லில் நேற்று மதியம் தொடங்கிய மழை விட்டு விட்டு பெய்தது. இரவிலும் விடாது பெய்த மழையினால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதே போல் சத்திரப்பட்டி, நத்தம், நிலக்கோட்டை, வேடசந்தூர், பழனி உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் அடிக்கடி நிலவும் மின் தடையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் பூலத்தூர் மெயின் ரோட்டில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர்.

இதனால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானலுக்கு தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காரணமாக அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

தொடர் சாரல் மழை மற்றும் மின் தடையால் அவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விபத்துக்களை தடுக்க மலைச்சாலையில் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் 26.9, கொடைக்கானல் ரோஸ் கார்டன் 21, பழனி 5.5, சத்திரப்பட்டி 11.6, நத்தம் 11.5, நிலக்கோட்டை 32, வேடசந்தூர் 26.7, காமாட்சிபுரம் 14.8, கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா 12 என மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 188.7 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News